Saturday, March 21, 2015

ப.கருங்குளம் அருள்மிகு பறைநாச்சியம்மன் (பரநாச்சியம்மன்).

Image result for puravi eduppu
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இந்தக் கோயில், காரைக்குடி அருகே பட்டமங்கலம் கிராமத்திற்கருகில் அமைந்திருக்கிறது. திருப்பத்தூர், மற்றும் கல்லலில் இருந்து பஸ் வசதி உண்டு.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றியமைக்கப்படும் கோயில் இது. அம்பிகையின் திருவுருவும் அவ்வாறே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றது.மிகக் குறைந்த அளவே உயரமுள்ள நுழைவாயில்.
 ஆண்கள் மட்டுமே இந்தக் கோயிலில் நுழைந்து வழிபட இயலும்.  அதுவும் கை, கால்களைச் சுத்தம் செய்து கொண்டு, மேல்சட்டை அணியாது தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும்.

 அன்னை, எட்டுத் திருக்கரங்கள் கொண்ட திருவுருவினள். ஏழு திருக்கரங்களில் சூலம் முதலான வெவ்வேறு விதமான ஆயுதங்கள், கீழ் இடது திருக்கரத்தில் அன்னக் கிண்ணம் தாங்கி அருளுகின்றாள். அன்னைக்கு நித்தியப்படி பூஜைகள் கிடையாது. வேண்டுதல்களின் படி பூஜை, அபிஷேகங்கள் செய்யப்படுகின்றது. இது 'சிறப்புக் கொடுப்பது' என்று அழைக்கப்படுகின்றது.

 கோயிலுக்கு வெளியே. வெளியே திறந்த வெளியில், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு, நொண்டி, சப்பாணி என்ற பெயர்களில் காவல் பூதங்களும், பண்டாரம், சந்நியாசி பாம்பாட்டி, பேச்சி, ராக்காயி, வீரபத்ரர், ஆஞ்சநேயர் என்று பரிவார மூர்த்திகளும் இருக்கின்றனர்.இவர்களின் பிம்பங்களும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன.

 இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குனி மாதம் கடைசி செவ்வாயில் திருவிழா நடைபெறுகிறது. அச்சமயத்திலேயே பிம்பங்கள் புதுப்பித்தலும் நடை பெறுகிறது.

கோயில் குறித்த கர்ண பரம்பரைக் கதை:

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னால், திண்டுக்கல் அருகில் கரந்தைமலை என்னும் சிற்றூரில் கோயில் கொண்டிருந்தாள் இந்த அம்பிகை. அவருக்கு அந்தண அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒரு நாள், கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்த அவர் மனைவி, குழந்தையை அங்கேயே விட்டு விட்டு திரும்பி விட்டாள். குழந்தை துறுதுறுப்பானவள். நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அவளை கண்காணிக்க, அர்ச்சகரால் இயலவில்லை. வேலைப் பளு வேறு சேர்ந்து கொண்டது. குழந்தை அங்கிருப்பதை மறந்தே போனார் அவர்.

உச்சிக் கால பூஜை முடிந்தது. கோயிலைப் பூட்டி விட்டுத் திரும்பினார். மனைவி கேட்ட முதல் கேள்வி, 'குழந்தை எங்கே?'.

பொதுவாக, நடை சார்த்தி விட்டால், பின்னர் குறிப்பிட்ட காலத்தில் திறக்கும் வரை நடுவில் திறக்கக் கூடாதென்பது விதி. ஆகவே, கோயிலைத் திறவாமல், சாவித் துவாரம் வழியே, மகளின் பெயர் கூறி வருமாறு அழைத்தார். ஆனால் ஒலித்து ஓர் அசரீரி. 'உன் மகள் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். மாலையில் அழைத்துச் செல்'.

அர்ச்சகர் மகிழ்வுடன் வீடு திரும்பினார். ஆனால் 'பெற்ற மனம் பித்து' இல்லையா.. அம்பிகை தன் குழந்தையோடு விளையாடுகிறாள் என்பதை நம்ப மறுத்தது தாயுள்ளம். மனைவி கோபம் மிகக் கொண்டாள். அர்ச்சகரின் கூற்றை நம்பவில்லை. அவர் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டு வந்து, பொய் கூறுவதாகச் சந்தேகித்தாள். உடனே தன் குழந்தை வர வேண்டும் என்றாள். இல்லாவிட்டால், தான் இறக்கப் போவதாகக் கூறி பயமுறுத்தினாள். வேறு வழியில்லாமல், அர்ச்சகர் கோயிலுக்குச் சென்றார். தேவியிடம் மன்னிப்புக் கோரி, பூட்டைத் திறந்தார். ஆனால் அந்தோ.. கோயில் சருவறையில், குழந்தை இறந்து கிடந்தது.

'நான் கொடுத்த குழந்தை. இதோடு விளையாடுகிறேன் என்று கூறியும், நம்பாமல் கூட்டிப் போக வந்தாய். இது உனக்குக் கிடைக்காது' என்ற அசரீரி ஒலித்தது.

கோபம் கொண்டார் அர்ச்சகர். வேதனையுடன் சாபமிட்டார். 'நான் உனக்கு ஆத்மார்த்தமாகப் பூஜைகள் செய்தது நிஜமெனில், கற்கோயில் உனக்கில்லாமல் போகட்டும்.  (அக்காலத்திய) உயர்குலத்தோர் யாரும் உனக்குப் பூஜை செய்ய மாட்டார்கள்'.

அன்னையின் கற்கோயில் அழிந்தது. மூல விக்ரகம், ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, ஊராரால் உப்பாற்றில் விடப்பட்டது. இது மிதலைக் கண்மாயில் ஒதுங்கியதாகக் கூறப்படுகின்றது. இதை எடுக்க பலரும் முயன்ற போது, சேரியில் இருப்பவர்களின் கைகளில் மட்டுமே சிக்கியது இந்தப் பெட்டி.

பெட்டி திறக்கப்பட்டு, தேவியின் திருவுருவம் வெளியே எடுக்கபட்டது. ஊர் பெரிய மனிதரான அம்பலக்காரருக்கு ஒரு மனக்காட்சி தென்பட்டது. தனக்கு இந்த ஊரில் இடம் கொடுத்தால், இந்த ஊரை சுபிட்சமாக வைத்திருப்பதாகவும், தனக்கு கற்கோயில் அல்லாமல், விளாறிமார் கொண்டு கோயில் கட்ட வேண்டும் எனவும், ஒரு குழந்தையின் மறைவுக்குத் தான் காரணமாக இருந்ததால், தனக்கும் நிரந்தர உருவம் வேண்டுவதில்லை, சிதைந்து மாறும் மண் பொம்மையாகவே வழிபாடு செய்தால் போதும் என்றும், சேரியில் இருப்போரே தன்னை பூஜிக்க வேண்டும் என்றும் அன்னை கூறினாள். மேலும், ஒரு பெண்ணின் கோபத்தாலும் சந்தேகத்தாலுமே தனக்கு இந்த நிலை வந்ததால், தன்னை பெண்கள் தரிசிக்கக் கூடாது என்றும் கூறினாள்.

 அன்னையின் கட்டளைகளை ஊரார் ஏற்றுக் கொண்டனர். விளாறிமாரால் கோயில் கட்டப்பட்டு,   பிம்பம் கோயிலினுள் வைக்கப்பட்டது. அன்னைக்கு 'பறைநாச்சியார்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அம்பலக்காரர் அன்னையுடன் ஐக்கியமானார். அவரது திருவுருவும், சப்த கன்னியர் எழுவரின் திருவுருவங்களும் அன்னையின் அருகில் கோயிலில் இருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, புரவி எடுப்புத் திருவிழா நடைபெறுகிறது. தை  மாதம், கோயில் பூசாரி, 'பிடி மண்' எடுத்து குயவர்களிடம் தருவார். குயவர்கள், பரம்பரையாக இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள். அவர்கள், மண்ணைப் பெற்றுக் கொண்டு, அதைச் சேர்த்து, அன்னைக்குப் புதிய  திருவுருவம்  செய்வர். பங்குனி மாதத்திற்குள்,  தேவிக்கும், காவல் பூதங்கள், பரிவார தேவதைகள் அனைவருக்கும்  திருவுருவங்கள் செய்து விடுவார்கள்.

 பங்குனி கடைசி செவ்வாய் திருவிழா. அதற்கு சுமார் பத்து நாட்கள் முன்பே, ஊர்க்கட்டுப்பாடுகள் செயலுக்கு வரும். கர்ப்பிணிகள், வீட்டு விலக்கானோர், புதிதாகக் குழந்தை பிறந்தோர், ஊருக்கு வெளியே தங்க வைக்கப்படுவார்கள். கடைசி செவ்வாய்க்கு முந்தைய வெள்ளியன்று, கோயில் அமைக்கத் தேவையான விளாறிமார் சேகரிப்புத் துவங்கும். இதற்காக, நாச்சியார்புரம் என்னும் ஊருக்கு பாதயாத்திரை மேற்கொள்வார்கள். போகும் வழியெல்லாம், இவர்களுக்கு  உணவு, நீர் மோர் முதலியவை வழங்க மக்கள் கூட்டம் காத்திருக்கும்.

நாச்சியார்புரத்தில் இருக்கும் விளாறிமார் தழைகளை சேகரித்துக் கொண்டு, அன்று இரவு கம்பனனூர் ஊருணிக் கரையில் தங்குவார்கள்.  சனிக்கிழமை அதிகாலை மீண்டும் துவங்கும் யாத்திரை, கோயில் வந்து நிறைவுறும்.

சனிக்கிழமை, பழைய கோயில் அமைப்பு களையப்படும்.

ஞாயிறு அதிகாலை, கோயிலில் உரிமையுள்ளோர் புதுக் கோயிலை நிர்மாணிக்கத் துவங்குவார்கள். மாலைக்குள் விளாறிமார் கொண்டு, கோயில் அமைக்கப்படும்.

செவ்வாய் காலையில், கோயில் உரிமை பற்றி, பூசாரிகளுக்கு அம்பலக்காரர் எழுதிக் கொடுத்த பெரிய அரிவாள், ஊர்வலமாக ஊருக்குள் எடுத்துச் செல்லப்படுகின்றது. அது திரும்ப கோயிலுக்கு வந்ததும், அனைவரும் அன்னையை அழைத்து வரப் புறப்படுவார்கள்.

ஊர் சதுக்கத்தில், (இதை சவுக்கை என்றழைக்கிறார்கள்)  தைலாபிஷேகம் முதலியன செய்து அன்னையின் புது  திருவுருவம்  தயாராக இருக்கும்.  அன்னையின் புதிய திருவுருவம், காவல் பூதங்கள், பரிவார தேவதைகள் அனைவ ரையும், வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வருகிறார்கள். இது 'புரவி எடுப்பு' என்று அழைக்கப்படுகின்றது.

அந்த சமயத்தில், ஊரில் மின் விளக்குகள் அனைத்தும், தெருவிளக்கு உள்பட அணைக்கப்படும்.  எண்ணை தீபங்கள் மட்டுமே எரியும். இந்த ஊர்வலம், கோயிலுக்கு வந்து நிறைவுறும். செவ்வாய் அன்று இரவு முழுவதும் வெளியே தரிசனத்துக்காக அன்னை கொலுவிருப்பாள். அன்று மட்டுமே பெண்கள் தரிசிப்பார்கள். புதன் விடியலில், கோயிலுக்குள் அன்னையின் திருவுரு வைக்கப்படும். பழைய திருவுரு, கோயிலுக்கு வெளியே சார்த்தி வைக்கப்படும். புதனன்று, வேண்டுதல்கள், பூசைகள் என்று மிகப் பெரிய விழாவாக நடைபெறும். 

பொதுவாக, அன்னைக்கு சுத்த பூசை என்னும் சாத்வீக பூஜையே நடைபெறுகிறது.  பலிகள் கொடுப்பதானால், பரிவார மூர்த்திகளுக்குக் கொடுப்பது வழக்கம்.

நிவேதனத்துக்கு கைக்குத்தல் அரிசி தான் பயன்படுத்துகிறார்கள். பத்து நாட்கள் சுத்தமாக விரதம் இருந்து பூஜை செய்கிறார்கள். பால் பொங்கல் பிரதான நிவேதனம். கோயில் நிவேதனங்கள் வெளியில் இருந்து ஏற்கப்படுவதில்லை. கோயிலில் உள்ளோரே தயார் செய்கிறார்கள்.

காரைக்குடி, பட்டமங்கலம் செல்வோர், பரநாச்சியம்மனைத் தரிசித்து, அருள் பெறலாம்!...

Tuesday, March 17, 2015

பாவாடை ராயனைத் தான் பத்தினியே தானழையும்!



படத்துக்கு நன்றி: கூகிளார் மூலம் மாலைமலர்ப் பத்திரிகை

பாவாடை ராயனைப் பற்றி மாரியம்மன் தாலாட்டில் நாலைந்து இடங்களில் வருகின்றது.

"பாவாடைராயனைத் தான் பத்தினியே தானழையும்"   என இரு இடங்களிலும், பாவாடைராயனும் தான் பக்கத்திலே கொலுவிருந்தார்  என்றொரு இடத்திலும் பாவாடை ராயனும் பல தேவரும் வாழி என்றொரு இடத்திலும் வருகிறது. இந்தப் பாவாடை ராயன் யாருனு புரியாமல் யோசனையிலே இருந்தேன்.  அப்புறமாத் தான் காவல் தெய்வமாய் இருக்குமோ என ஒரு சந்தேகம்.  காவல் தெய்வங்கள் பற்றிய ஒரு புத்தகத்தில் தேடினப்போ கிடைச்சது பாவாடை ராயனும், அவரோட எஜமான் ஆன பருதேசியப்பரும்.

பருதேசினு ஊர் ஊராச் சுத்தறவங்களைச் சொல்றது உண்டு.  இங்கேயும் அப்படிச் சுத்தின ஒருத்தரைத் தான் சொல்றாங்க.  அவர் வேறே யாரும் இல்லை.  நம்ம சிவனார் தான்.  அதுவும் சனி படுத்தின பாடாம் அது.  எல்லாரையும் பிடிக்கவேண்டிய சனிஸ்வரனுக்கு அப்போ சிவனிடம் போகவேண்டிய நேரம்.  ஆனால் அவர் கிட்டே போனால் நெற்றிக்கண்ணைத் திறந்துடுவாரே?  என்ன செய்யறது?  நாரதர் இன்னும் கொஞ்ச நாட்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் கல்யாணம் நடக்கப் போறது. அப்போப் பிடிச்சுக்கலாம்னு சொல்லி வழி காட்டறார்.  சரினு எல்லாருமா கல்யாணத்துக்குப் போறாங்க.  அங்கே பிரம்மாதான் கல்யாணம் நடத்தி வச்சுண்டு இருந்தார்.  கல்யாணம் முடிஞ்சதும் வழக்கப்படி புரோகிதம் பண்ணின பிரம்மாவுக்கு மரியாதை செய்யறாங்க சிவனும், பார்வதியும்.  அப்போ பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் ஈசன் மாதிரியே.

ஐந்து தலைகளுக்கும் தீபம் காட்டணும், நாலுக்குக் காட்டியாச்சு. ஐந்தாவது தலைக்கு எந்தத் திசையிலே காட்டறதுனு யோசிக்கும்போது, அந்தச் சமயம் நாரதர் சைகை காட்ட சனி ஈசனின் கையில் புகுந்து கொள்ள, அவர் கோபத்தோடு அந்த ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிய, பிரம்மாவுக்கும் கோபம் வந்து என்னோட இந்தத் தலை திருவோடாக உம் கையில் மாறி நீர் ஊர் ஊராகப் பித்தனைப் போல் பிச்சை எடுக்கவேண்டும்னு சாபம் கொடுக்கிறார்.   முன்னைப்பழம்பொருளுக்கும் முன்னைப்பழம்பொருள் ஒரு ஆண்டியைப் போல, பித்தனைப் போல பிச்சை எடுக்கிறார்.  பிக்ஷாடனராக ஒவ்வொரு ஊராக வந்து பிச்சை கேட்கிறார்.  எங்கேயும் பிரம்ம கபாலத்தில் அவர் வாங்கும் பிச்சையால் கபாலம் கையை விட்டுப் போகவில்லை.  அப்போது....

தாம் செல்லும் இடங்களிலெல்லாம் அற்புதங்களை நடத்திய பருதேசியப்பரால் தன் கைக் கபாலத்தைக் கைகளிலிருந்து எடுக்க முடியாதா?? இறைவனுக்குத் தெரியாதா? எல்லாம் வல்லவனுக்கு இது ஒரு கஷ்டமான காரியமா?  எனினும் எடுத்துக்கொண்ட விளையாடலை பூரணமாக விளையாடி முடிக்கவேண்டுமே.  ஆகவே கடைசியாகக் கொள்ளிடக் கரையில் இருக்கும் வல்லம்படுகை வந்து சேர்கிறார் ஈசனாகிய பரதேசி.  நமக்கெல்லாம் ஞானப் பிச்சை அளிக்கும் அவன் நம்மிடமிருந்து பிச்சையாக வாங்குவது நம்முடைய வினைப்பயன்களையும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அன்றோ. அவற்றை வாங்கிக்கொண்டு அவன் நமக்குத் திரும்பத் தருவதோ மாபெரும் செல்வம் அல்லவோ!   ஆனால் இதை எத்தனை பேர் அறிவார்கள்? அப்படியே பாவாடை ராயனும் அறியவில்லை.

ஊர் அடங்கியவேளையிலே பரதேசிக் கோலத்தில் வந்து சேர்ந்த பருதேசியப்பரைக் கண்ட ஊர்க்காவல்காரனான பாவாடைராயன்  இவ்வுலகத்து மாந்தருக்கெல்லாம் வேண்டியது தருபவர் ஆன அவர் மேல் சந்தேகம் கொண்டு அந்தப் பொன்னான அருள் தரும் அபயக்கரங்களுக்கு விலங்கிட்டுச் சிறையில் அடைக்கிறான்.  காலையில் விசாரணை செய்து கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பிச் சென்று இரவு முழுதும் ஓய்வு எடுத்துக்கொண்டு காலை திரும்பினான் பாவாடை ராயன்.  வந்து பார்த்தால்??

ஆஹா, இது என்ன அற்புதக் காக்ஷி, இந்தக் கண்கள் காண்பது கனவா? நனவா? தன் சுய உருவோடு நின்றிருந்த ஈசனைக் கண்ட பாவாடைராயன் நடுநடுங்கிப் போனான்.  "என் ஐயனே, உன்னையா சிறையிலடைத்தேன்!" என்று கதறி அழுதவண்ணம் ஈசன் காலடிகளில் விழுந்தான்.  தன்னை மன்னிக்கும்படியும், தான் அடியவனாய் இருந்து பணிவிடைகள்  ஆற்ற விரும்புவதாயும், சாபம் தீரும்வரையிலும் ஈசன் அங்கே குடிகொள்ளவேண்டும் எனவும் வேண்ட, ஈசனும் சம்மதித்து அங்கே குடியேறுகிறார்.

இந்தப் பருதேசியப்பருக்குக் கையில் பிக்ஷாபாத்திரமாகக் கபாலத்தை மட்டுமே ஏந்திய இவருக்குக் காவல்காரனாம் பாவாடைராயன்.  இவர்கள் கோயில் கொண்டிருக்கும் இடம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள அழகிய கிராமம் ஆன வல்லம்படுகையில் உள்ளது. மூலவர் பருதேசியப்பர்.  இவருக்குக் காவலாக  விநாயகர், முருகன், முத்தாலம்மன், பேச்சியம்மன், முனீஸ்வரர் ஆகியோர் பிராகாரங்களில் இடம் பெற்றிருக்க ஆலயத்தின் பின்னால் உள்ள கொட்டகையில் தன் இரு மனைவிமாரான முத்துநாச்சி, அரியநாச்சி ஆகியோருடன் பாவாடைராயன் காணப்படுகிறார்.




படத்துக்கு நன்றி கூகிளார்

இந்தப் பருதேசியப்பர் கோயிலின் எதிரே சற்றுத் தள்ளி காணப்படும் ரயில் தண்டவாளத்தை 300 ஆண்டுகள் முன்னர் முதல்முதல் அமைக்கும்போது ஆங்கிலேயர்கள் கருவறையைத் தகர்த்துவிட்டு ரயில் பாதையை அமைக்கத் திட்டம் போட்டுக் கோயிலை இடிக்க முயன்றிருக்கிறார்கள்.  அதன் முன்னர் வரும் கோயிலின் அருகே உள்ள இடங்களில் தண்டவாளம் பதிக்கப்பட்டுவிட்டது.  கோயிலை இடிக்க உத்தரவு கொடுத்துவிட்டுப் போனால் மறுநாள் ஏற்கெனவே பதிக்கப்பட்ட தண்டவாளங்கள் வேறு திசையில் தூக்கி வீசப்பட்டிருந்தன.  அதிர்ந்த ஆங்கிலேய அதிகாரி மீண்டும் அதே இடத்தில் பதிக்க மீண்டும் தண்டவாளங்கள் தூக்கி வீசி எறியப்பட, மூன்றாம் முறை முயன்றபோது இஞ்சினியரின் கண்பார்வையே பறிபோனதாம்.  பின்னர் உள்ளூர் மக்கள், பெரியதனக்காரர்களின் வேண்டுகோளையும், பருதேசியப்பரின் சக்தியையும் கண்டு வியந்த ஆங்கிலேயர் கோயிலில்  இருந்து சற்றுத் தள்ளி தண்டவாளங்களை அமைத்தனராம்.  அவர்களுக்குப் பரிகாரமாக மண்குதிரை செய்து வைக்கச் சொல்ல அப்படியே செய்தும் வைத்திருக்கின்றனர்.  இந்தப் பாவாடைராயன் கதையைப் படித்ததும், மாரியம்மன் தாலாட்டின் பொருள் நன்கு புரிய ஆரம்பித்துள்ளது.


சமயபுரம் மாரியம்மனின் தாய் ஆதி மாரியம்மன்!

ஆதி சமயபுரம் கோயிலின் நுழைவாயில்.




மாகாளிக்குடியை அடுத்து நாங்கள் சென்றது ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம்.  இது குறித்து ஏற்கெனவே எழுதி இருக்கேன். சமயபுரம் மாரியம்மன் இங்கே தான் பிறந்தாள் எனவும் அவளுக்கு இது தாய் வீடு எனவும் சொல்கின்றனர்.  இந்த அம்மனும் சமயபுரத்தை நோக்கிய வண்ணமே அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.  இங்கே அம்மனின் சக்தி மிகவும் அதிகம் என்பதால் படங்கள் எடுக்கத் தடை.  மூலக் கோயில் இன்னமும் ஓட்டுக்கூரை போட்ட கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது.  அங்கே தான் விபூதி, குங்குமப் பிரசாதம் கொடுக்கின்றனர்.  இந்தப் பழைய கட்டிடத்தை இடித்துப் புதிதாகக் கட்ட வேண்டிப் பலமுறை முயன்றிருக்கின்றனர்.  ஆனால் ஒவ்வொரு முறையும் தடங்கல் ஏற்படப் பின்னர் ப்ரச்னம் கேட்டதில் இங்கே புதுமை வேண்டாம் என அம்மனே சொல்லி விட்டதாகவும், அபிஷேஹ அர்ச்சனைகளுக்குப் பக்கத்திலே ஒரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து கொள்ளும்படியும் உத்தரவு கிடைத்துள்ளது.  அதன் பேரில் இதை ஒட்டியே கொஞ்சம் நவீனமாகப் புதியதொரு சந்நிதியில் இந்த அம்மனின் சக்தியில் மறுபாதி எனச் சொல்லும் வண்ணம் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.  இவளுக்கே அபிஷேஹ ஆராதனைகள் நடைபெறுகின்றன.

சமயபுரம் மாரியம்மன் ஆதியில் இங்கு தான் கோயில் கொண்டிருந்ததாகச் சொல்கின்றனர். ஶ்ரீரங்கம் கோயிலில் இருந்த வைஷ்ணவி என்னும் அம்மன் உக்கிரமாய் இருந்ததால் அந்த அம்மன் விக்கிரஹத்தை அங்கிருந்து எடுத்துச் சென்று பிரதிஷ்டை செய்த இடம் தான் இந்த இனாம் சமயபுரம் என்று சொல்லப்படுகிறது. இதை அரண்மனை மேடு என்றும் அழைக்கின்றனர். ஒரு சமயம் கங்க நாட்டரசனுக்கு வாழ்க்கைப்பட்ட சோழ இளவரசிக்கு இங்கே ஒரு மாளிகை இருந்ததாயும் பின்னர் இது பாழடைந்து போய் வேம்புக்காடாக மாறியதாயும் சொல்கின்றனர்.  இஸ்லாமியப் படையெடுப்பின் போது இங்கிருந்த அம்மனின் உற்சவ விக்ரஹத்தை மறைத்து வைக்க வேண்டி எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

அப்போது கொள்ளிடக்கரையில் இப்போது   கோயில் இருக்கும் இடத்தில் விக்ரஹத்தைக் கீழே வைத்து விட்டு வீரர்கள் இளைப்பாறினார்களாம். , பின்னர் மீண்டும் விக்ரஹத்தை எடுத்துச் செல்ல நினைத்தபோது விக்ரஹம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.  அந்த விக்ரஹம் சில குழந்தைகளால் கண்டெடுக்கப் பட்டு விளையாட்டுப் பொருளாக மாறிற்று எனவும், ஊர் மக்கள் அதைக் கண்டு மாரியம்மன் சிலை என்பதைக் கண்டறிந்து மீண்டும்  கோயிலிலேயே சிலையை வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அங்கிருந்த ஒரு பெண் கோயிலில் வைக்க வேண்டாம் எனத் தடுத்திருக்கிறாள்.  பின்னர் அம்மனின் அருளை நேரடியாகப் பெற மக்கள் பூக்கட்டிப் பார்க்க அதிலும் அம்மன் சிலையை அங்கே கொண்டு வர வேண்டாம் என்றே வந்ததாம்.  ஆகவே ஒரு யானை மீது அம்மன் சிலையை ஏற்றி யானை எங்கே கடைசியாய் நிற்கிறதோ அங்கே கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டு யானை மீது சிலை ஏற்றப்பட்டது.  யானை சிறிது தூரம் சென்றதும் படுத்துவிட்டது.  அந்த இடத்திலேயே அந்த அம்மன் சிலையை வைத்து வழிபட்டனர்.  இவளை ஆதி மாரியம்மன் என்கின்றனர்.  இவள் தெற்கு நோக்கிக் கொண்டு தற்சமயம் சமயபுரத்தில் குடி கொண்டிருக்கும் மாரியம்மனைப் பார்த்த வண்ணம் காட்சி அளிப்பாள்.  இந்தக் கோயில் தற்போதைய சமயபுரத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  சமயபுரம் மாரியம்மன் வருடத்தில் ஒரு முறை பங்குனி மாதம் கடைசி ஞாயிறு அல்லது சித்திரை மாதம் முதல் ஞாயிறு அன்று இனாம் சமயபுரத்தில் உள்ள தாயைப் பார்க்கச் செல்வதாகவும், அப்போது ஊர் மக்கள் சமயபுரம் மாரியம்மனைத் தங்கள் பெண்ணாகக் கருதிச் சீர் வரிசைகள் கொடுப்பதாகவும் ஐதீகம்.  இந்நிகழ்ச்சி சமயபுரம் மாரியம்மனின் பூச்சொரிதல் திருவிழாச் சமயம் நடைபெறுகிறது.

இந்தக் கோயிலை முழுமையாகப் படம் எடுப்பதைத் தடுத்துவிட்டனர். இவளே ஆதி சமயபுரம் மாரியம்மன் எனப்படுகிறாள்.









Monday, March 16, 2015

சமயபுரத்துக்கு அருகே உச்சினிமாகாளி கோயில்!




பலருக்கும் சமயபுரம் மாரியம்மன் கோயில் குறித்துத் தெரிந்திருக்கும்.  ஆனால் அதற்கு அருகே மூன்று கிலோ மீட்டருக்குள் இருக்கும் ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரத்தையும், விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி மாகாளிக் கோயிலையும் தெரிந்திருக்காது. திருச்சிக் காரர்கள் பலருக்குமே இது குறித்துத் தெரியவில்லை.  நான் ஏற்கெனவே பதினைந்து வருடம் முன்னர் இந்தக் கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன்.  இப்போதும் இரண்டு வருடம் முன்னர் விருந்தாளிகள் வந்திருந்த ஒரு சமயத்தில்  இனாம் சமயபுரம்  மற்றும் உச்சிமாகாளி கோயில் இருக்கும் மாகாளிபுரம் போக ஆயத்தமானோம்.  இம்முறை வந்த விருந்தாளிகளிடம் ஏற்கெனவே நான் இந்த ஆதி சமயபுரம் குறித்தும், உஜ்ஜையினி மாகாளி  குறித்தும் வேதாளம் குறித்தும் சொல்லி இருந்தேன்.  


முதலில் நாங்கள் சென்றது  மாகாளிபுரம் என்னும் மாகாளிக்குடி.   சமயபுரம் கோயிலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்குள்ளாகவே இது இருக்கிறது.  முதலில் இந்தக் கோயிலுக்குத் தொண்ணூறுகளில் என் தம்பியோடு சென்றோம்.  அதன் பின்னர் இருமுறை நாங்க இரண்டு பேரும் போயிருக்கோம்.  நாங்க போனதைப் பதிவாயும் போட்டிருக்கேன். அப்போது படங்கள் எடுக்காததால்  படங்கள் போடவில்லை.  இந்தக் கோயிலில் தான் நம்ம விக்கிரமாதித்தன் வழிபட்டானாம்.  காடாறு மாசம், நாடாறு மாசம் என வாழ்க்கை நடத்திய விக்கிரமாதித்தன் ஒரு சமயம் காடாறு மாசத்தின் போது ஒரு சமயம் இங்கே காடாறு மாசம் தங்க வந்ததாயும், அப்போது தன்னுடன் கொண்டு வந்த காளி சிலையை இந்தக் கோயிலில் வைத்து வழிபட்டதாகவும், திரும்பச் செல்கையில் அந்தச் சிலையை எடுக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.





விக்கிரமாதித்தன் எவ்வளவோ முயன்றும் அந்தச் சிலையை எடுக்க முடியாததால் காளியிடம் கெஞ்சுகிறன் தன்னுடன் வரும்படி.  காளியோ தான் இங்கேயும் இருக்க ஆசைப்படுவதாயும் தன் சக்தி இங்கும் தங்கும் என்றும் கூற வேறு வழியின்றி அங்கேயே அந்த அம்மனை அப்படியே விட்டுவிட்டு வழிபாடுகள் செய்து வந்தான். ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்து வந்திருக்கிறது அல்லவா?  அந்தக் கோயில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் கோயில்.  அம்மன் அர்த்த்நாரீஸ்வர வடிவத்தில் ஆனந்த செளபாக்கிய சுந்தரியாகத் தாண்டவக் கோலத்தில் அசுரனை வதைக்கும் கோலத்தில், ஆனால் அதே சமயம் சாந்தமான பாவனையில் காணப்படுகிறாள்.  அர்த்த நாரீஸ்வர வடிவமும் விசித்திரமாகக் காணப்படுகிறது.  வழக்கமாய் அம்பாள் இடப்பக்கமும், ஸ்வாமி வலப்பக்கமுமாய்க் காணப்படும் வடிவம் மாறி அம்பாள் வலப்பக்கமும், ஸ்வாமி இடப்பக்கமுமாய்க் காண்கிறோம்.  அதோடு அம்மனுக்கு இரண்டு, நான்கு, எட்டு,என்றெல்லாம் கைகள் இல்லாமல் மூன்று கைகளும் உள்ளன. அம்மனுக்குள்ளாக ஈசன் அடக்கம் எனச் சொல்வதைப் போல இங்கும் மூலஸ்தானத்தில் விமானத்தின் மீது ஒரே கலசம் காணப்படுகிறது. பொதுவாகச் சிவன் கோயில்களில் சிவன் சந்நிதியின் மேல் மட்டுமே  ஏக கலசம் காணப்படும்.  ஆனால் இங்கே அம்பாள் கோயிலிலும் ஏக கலசம் காணப்படுகிறது.


நுழைவாயில் இது தான்

மூலஸ்தான விமானம் ஏக கலசத்துடன் மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவதோடு அம்பாளின் வாகனம் ஆன சிம்மமும் அங்கே காணப்படவில்லை.  மாறாக ரிஷபம் காணப்படுகிறது.  வாயு மூலையில் சுதைவடிவில் உள்ள முருகனுக்கு மேலே சீன மனிதன் ஒருவன் தென்படுவதைப் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் என்று சொல்கின்றனர்.  இங்கே தர்ம சாஸ்தாவும் காணப்படுகிறார்.  மனைவி, குழந்தை எனக் குடும்பத்தோடு காணப்படும் சாஸ்தா யானை வாகனத்தில் ஐயனார் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.  மூலஸ்தானத்து அம்மனும் புடைப்புச் சிற்பமாகவே காண்கின்றோம்.

கோயிலின் நுழைவிலேயே மாற்றத்தையும் காணலாம்.  எல்லாக் கோயில்களிலும் இடப்பக்கம் காணப்படும் விநாயகர் இங்கே வலப்பக்கமும், வலப்பக்கம் இருக்கும் முருகனுக்குப் பதிலாக ஆஞ்சநேயரும் காண்கிறோம்.  சிவலிங்கம் ஒன்று சுவரில் சிற்பமாய்ச் செதுக்கப் பட்டுள்ளது.  ஆனந்த செளபாக்கிய சுந்தரியின் மூலஸ்தானத்துக்கு அருகேயே ஒரு தனி அறையில் உற்சவர் ஆன அழகம்மை நான்கு கைகளோடு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார்.  இவருக்கு அருகே தான் உஜ்ஜையின் மஹாகாளி அம்மனைக் காணலாம்.  கோயிலின் குருக்கள் தீபாராதனை காட்டி தரிசனம் செய்வித்தார். படங்கள் எடுக்க அனுமதி இல்லை. 

இந்தக் கோயிலின் தல வரலாறு விக்கிரமாதித்தன் சம்பந்தப் பட்டதாகவே உள்ளது.  விக்கிரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜையினி காளியம்மன் சிலை முழுக்க முழுக்க ஸ்வர்ணத்தால் ஆனது என்று கூறப்படுகிறது. 


கீழே வேதாளமும், சுளுவனும் காணப்படும் சந்நிதி





மேலும் இங்கே விக்கிரமாதித்தனுடன் வந்த வேதாளத்துக்கும், விக்கிரமாதித்தனின் மதியூக மந்திரியான பட்டி என்ற சுளுவனுக்கும் சந்நிதிகள் காணப்படுகின்றன.  ஒரு சிலர் விக்கிரமாதித்தனை வேதாளம் கேள்விகள் கேட்டது இங்குள்ள முருங்கை மரத்தில் இருந்த போதுதான் என்றும் கூறுகின்றனர்.  முதல்முறை இந்தக் கோயிலுக்குச் சென்ற போது ஒரு முருங்கை மரம் இருந்தது.  தற்சமயம் இல்லை.  வேறு எந்தத் தலத்திலும் வேதாளத்திற்கும், சுளுவனுக்கும் சிலைகள் கிடையாது.  சுளுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மை கிடைக்கும் என்றும் எதிலும் வெற்றி பெறலாம் என்றும் கூறுகின்றனர்.  இந்தப் பக்கங்களில் சுளுவன் சாதனை என்னும் சொல்லும் இன்னமும் வழக்கில் உள்ளது. அசையாமல் ஸ்திரமாக இருத்தலை இது குறிப்பிடும் என்கின்றனர்.

இவற்றைத் தவிரவும் இங்கே அலமேலு மங்கையுடன் கூடிய பிரசன்ன வெங்கடாசலபதியும் கையில் கதையுடன் காணப்படுகிறார்.  கதை இருப்பதால் கதாதரர் என்ற பெயரிலும் அழைக்கின்றனர்.  இவரை வணங்கினால் பூரண ஆயுள் கிடைக்கும் என்றும் மரணபயம் இல்லை எனவும் கூறுகின்றனர்.



சந்தான கிருஷ்ணன்   வேதாளம், சுளுவன் சந்நிதிகளுக்கு அருகேயே சந்தான கோபாலகிருஷ்ணன் குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார்.  இவருக்கு வெண்ணெய் அபிஷேஹம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை.  விலங்குத் துறையான் எனப்படும் காவல் தெய்வம் ஆன கருப்பண்ண சுவாமி இங்கே சங்கிலிக் கருப்பு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார். 




இவர்களைத் தவிரவும் காவலுக்கு மதுரை வீரனும், வெள்ளையம்மாள், பொம்மி சகிதம் காட்சி அளிக்கிறான். 


மதுரை வீரன் மனைவியருடன்


அம்பிகையின் தேர்த்திருவிழா சமயம் தேரோட்டத்தில் காவலுக்கு மதுரை வீரனே செல்வான் என்றனர்.  தேர் நிலைக்கு வந்தவுடன் மதுரை வீரனை மீண்டும் கட்டிவிடுவார்களாம்.  இதற்கு அடையாளமாய் விலங்கு அங்கே காணப்படுகிறது.  நவகிரஹங்கள் இந்தக் கோயிலில் தத்தம் மனைவிமாருடன் காட்சி அளிக்கின்றனர்.


இக்கோயிலின் தீர்த்தம் சக்தி தீர்த்தம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது.  நந்தவனத்தில் உள்ள கிணறே சக்தி தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.  இங்கு ஈசன் தவம் செய்வதாகவும், அவரின் சடாமுடியின் கங்கையே இங்கே தீர்த்தமானதாகவும் ஐதீகம்.  கிணற்றின் அடியில் நீரூற்று இல்லாமல் பக்கவாட்டில் உள்ள ஒரு ஊற்றின் மூலமே கிணற்றில் நீர்வரத்து காணப்படுகிறது.  இந்த தீர்த்தம் தோல் நோய், சித்தப்பிரமை போன்றவற்றிற்கு நன்மை பயக்கும் எனவும், பெண்கள் இந்தக் கிணற்றில் நீர் இறைக்கக் கூடாது எனவும் ஆணகளே இறைத்துப் பெண்களுக்கு வழங்குவார்கள் எனவும் கூறுகின்றனர்.

கோயில் ப்ழமையாகவே காணப்பட்டது.  தற்சமயம் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டபடியால் இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.  சமயபுரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டரில் இருக்கும் மாகாளிபுரத்தில் இந்தக் கோயில் உள்ளது.  அடுத்து ஆதி சமயபுரம் என்னும் இப்போதைய சமயபுரம் மாரியம்மனின் தாய் எனப்படும் மாரியம்மன் கோயிலைக் காணலாம்.