Friday, January 12, 2018

பாளையம் பச்சைவாழியம்மன் திருக்கோயில்

Singanenjam Sambandam

பல்லவர் புகழ் பனமலைக்கு அருகே பனமலைப் பேட்டை என்று ஒரு சிற்றூர். பேட்டை என்றாலே தொழில் நடக்குமிடம். இங்கேயும் இதை     யொட்டியுள்ள  பாளையம் எனும் கிராமத்திலும் இன்றும் நெசவுத்தொழில் நடைபெற்று வருகிறது. பாளையத்தில் பசுமை  வயல்களுக்கும் புளியந்தோப்ப்புகளுக்கும் இடையே பச்சைவாழியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவிலை கன்னிக் கோயில் என்றும் அழைக்கிறார்கள். என் தங்கையின் குடும்பத்தாருக்கு.குல தெய்வம் இந்த பச்சையம்மன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, தங்கை மகனுக்கு மொட்டையடிக்கும் நிகழ்ச்சியின் போது  போனதுதான். நேற்று தங்கையின் பேரனுக்கு மொட்டையடிக்கும் விழாவிற்கு போகும் வாய்ப்பு கிடைத்தது.

எல்லா பச்சைவாழியம்மன் திருக்கோயில்களிளும் இருப்பது போல் இங்கேயும் கருமுனி, கொடிமுனி, தவமுனி, விலாடமுனி, செம்முனி, முத்துமுனி , வாழ்முனி என ஏழு முனிகள் காவல் தெய்வங்களாக வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். ஏழு முனிகளில் இளையமுனியாகிய  வாழுமுனி உருவத்தில் மிகப் பெரியவராகக் காணப்படுகிறார். அவரது வலது பாதத்தின் கீழே  ஒரு தலை காணப் படுகிறது.  ஒரு சில கன்னிக் கோயில்களில் வாழுமுனி ஐந்தாவதாக அமர்ந்திருப்பார். இங்கே முதலிலேயே இருக்கிறார். வழக்கமாகக் கன்னிக்கோயில்களில் குதிரை சிலை ஒன்று இருக்கும். தெற்கு பார்த்து நின்றிருக்கும். இங்கே குதிரை சிலை இல்லை.

பச்சயம்மனுக்கு இருபுறமும் காத்தாயி அம்மன் உள்ளிட்ட பல தெய்வங்கள் உள்ளன.  கோயிலுக்கு எதிரே வீரன் அமர்ந்து காவல் காக்கிறார்.

வழிபாடுகள் தமிழ் மொழியில்தான் நடைபெறுகின்றன. சுமார் ‘இருநூறு முன்னூறு ஆண்டுகளாக இருக்கும் கோயில்’ என்கிறார்கள் சரியாகத் தெரியவில்லை.