Monday, April 27, 2015

கதை கேளுங்க, கதை கேளுங்க, மதுரை வீரன் கதையைக் கேளுங்க!

Image result for மதுரை வீரன்


மதுரை வீரன் பல குடும்பங்களின் குலதெய்வமாகக் கொண்டாடப் படுகின்றான். ஆனால் அவன் பிறந்தது அரச குலம் எனச் சிலரும் சக்கிலிய குலம் எனச் சிலரும் சொல்கின்றனர். காசி அரசனுக்குப் பிள்ளையாகப் பிறந்த மதுரை வீரனை அவன் வளர்ந்து பெரியவன் ஆனால் நாட்டிற்கு நல்லது இல்லை எனத் தந்தை காட்டில் விட்டு விட்டார். அந்தக் குழந்தையைத் தான் சக்கிலிய இனத்தவர் காட்டில் கண்டெடுத்து வளர்த்து வருகின்றனர். அவர்கள் மூலம் தென்னாட்டிற்கு வந்த மதுரை வீரனைக் கம்பள நாயக்கர் குலத்தைச் சேர்ந்த பொம்மையா நாயக்கர் மகளான பொம்மியைக் காவல் காக்க ஏற்பாடு செய்கின்றனர். பொம்மி வயதுக்கு வந்திருந்தாள். கம்பள நாயக்கர் குல வழக்கப்படி அவளைக் காட்டில் குடில் அமைத்துச் சக்கிலியர்களை வைத்துக் காவல் செய்ய வ் வைப்பது வழக்கம். அந்த வழக்கப்படி மதுரை வீரன் காவல் இருக்கையில் பொம்மி அவனைப் பார்த்துக் காதல் கொள்கிறாள். மதுரை வீரனுக்கும் பொம்மியின் மேல் ஆசை வர இருவரும் ஒருவருக்கும் தெரியாமல் ஊரை விட்டுச் செல்கின்றனர்.  மதுரைப் பக்கம் செல்லும் மதுரை வீரனும் பொம்மியும் அங்கே மிகுந்த பராக்கிரமத்துடன் இருந்து வந்த கள்ளர் சமூகத்தினரை அடக்குகின்றான். இதன் மூலம் திருமலை நாயக்கரின் படையிலும் சேர்ந்து மாபெரும் வீரனாகிறான்.

இதற்குள் தன் மகளை மதுரை வீரன் கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டதை அறிந்த பொம்மையா நாயக்கர் திருமலை நாயக்கரிடம் மதுரை வீரன் குறித்துச் சொல்கிறார். அரண்மனையில் நாட்டியக்காரி எனச் சொல்கின்றனர்.  சிலர் கள்ளர் இனத்தைச் சேர்ந்த பெண் என்கிறார்கள். வெள்ளையம்மாள் என்பவளும் மதுரை வீரனின் மேல் காதல் கொள்கிறாள். இது திருமலை நாயக்கருக்குப்பிடிக்கவில்லை. ஆனால்  மதுரை வீரன் அவளையும் மணக்கிறான். அவன் அரசர் மகன் என்பதை அறியாத திருமலை நாயக்கர் சக்கிலிய இனத்தைச் சேர்ந்த ஒருவன் உயர்குடியில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொண்டுவிட்டான் என எண்ணிக் கொண்டு அவனுக்கு மாறுகால், மாறுகை வாங்கிக் கொலை செய்து விடுகிறார். இரு மனைவியரும் அவனுடன் கூடவே இறக்கின்றனர். அப்போது விண்ணிலிருந்து பூமாரி பொழிய மதுரை வீரனும் அவன் மனைவியரும் அங்கேயே சிலை ரூபமாக நிலைத்து நின்று விட்டனர்.

அருந்ததி இனத்தவரின் குலதெய்வமான மதுரை வீரன் இப்போது பலருக்கும் குல தெய்வம், பல உயர்சாதியினருக்கும், பிராமணர்களுக்கும் குல தெய்வம். மதுரை வீரன் சிலை நடுவில் இருக்க அவன் இரு மனைவியரும் இருபக்கமும் இருக்கும்படியான கோலத்திலேயே மதுரை வீரன் சிலையைக் காண முடியும்.  அரிவாளை ஓங்கிக் கொண்டு முறுக்கிய மீசையுடன் மதுரை வீரன் நிற்க இருபக்கமும் இரு மனைவியரும் காணப்படுவார்கள்.  இந்தக் கதையை திரு எம்ஜிஆர் நடித்துத் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடி இருக்கிறது.